இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் நதாலி ஸ்கிவர்-பிரண்ட், டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காகத் தனது காயத்திலிருந்து விரைவாகக் குணமடைய ‘மேக்னடிக் ரெசோனன்ஸ் தெரபி’ எனும் நவீன சிகிச்சையைப் பயன்படுத்தியுள்ளார்.

வழக்கமாக வீரர்கள் பனிக்கட்டிகளால் ஒத்தடம் கொடுப்பது அல்லது பிசியோதெரபி போன்ற முறைகளைப் பின்பற்றுவர். ஆனால், தனது காயம் விரைவாகக் குணமடைய வேண்டும் என்ற உறுதியுடன், இதுவரை மகளிர் கிரிக்கெட்டில் பெரிதும் பயன்படுத்தப்படாத இந்தத் தனித்துவமான சிகிச்சையை அவர் தேர்ந்தெடுத்தார்.

இந்த சிகிச்சைக்காக, குதிரையின் லாடம் போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு பிரத்யேக இயந்திரத்தில், கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் அமர்ந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்தத் தொழில்நுட்பம் பொதுவாக மூட்டுவலி உள்ளவர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, இது மருந்துகள் எதுவுமின்றி செல்களின் செயல்பாட்டைச் சீராக்கி, உடலை விரைவில் குணமடைய உதவுகிறது. தனது வீட்டிலும் ஹோட்டலிலும் இந்த இயந்திரத்தைப் பொருத்தி, தினமும் நீண்ட நேரம் சிகிச்சை பெற்று அவர் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார்.

“>

 

கடந்த ஏப்ரல் மாதம் கால் பகுதியில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனாலும், உலகக்கோப்பைத் தொடருக்காக அவர் காட்டிய இந்த அர்ப்பணிப்பும், நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முறையும் விளையாட்டு உலகில் பெரும் ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுத்தந்துள்ளன.