மகாராஷ்டிரா  மாநிலத்தை சேர்ந்த ரிஷப், ரூபாலி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரலுங்கர், ரமேஷ் பரமா, விக்ரம், லீலா, பெலிடினன்(13), தர்ஜெயன்(8) உள்ளிட்ட 8 பேர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றனர். அதன் பிறகு குஜராத்திற்கு திரும்ப கார் மூலம் மதுரை நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

நேற்று மாலை பரமத்தி பி.எஸ். என்.எல் அலுவலகம் அருகே சாலையின் அருகே மரத்திற்கு அடியில் வாகனத்தை நிறுத்தி விட்டு சாப்பிட்டனர். அப்போது நாமக்கல்லுக்கு முட்டை ஏற்றுவதற்காக சென்ற கன்டெய்னர் லாரி காரின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ரிஷப், ரூபாலி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காருக்குள் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காரின் இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கேரளா மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனரான நிதிசன்(33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.