
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது மகளின் காதலையும், திருமண முயற்சியையும் ஏற்க முடியாத தந்தை, தனது மகளையும் அவரது காதலனையும் மின்சாரம் பாய்ச்சி பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள், காகர் கிராமத்தைச் சேர்ந்த ஜோபன்தீப் சிங் (24) மற்றும் போபராய் பாஜ் சிங் கிராமத்தைச் சேர்ந்த சுக்ப்ரீத் கவுர் (22) என்பது தெரியவந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி வீட்டை விட்டு ஓடி நீதிமன்றத்தில் திருமணம் செய்ய முடிவு செய்து அமிர்தசரஸ் நீதிமன்றத்திற்கு வந்தனர். அப்போது, அவர்களை பார்த்த உறவினர் ஒருவர் தகவல் அளித்ததை தொடர்ந்து, இருவரும் குடும்பத்தினரால் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
வீட்டிற்கு அழைத்து சென்றபின், இருவரையும் ஒரு அறையில் அடைத்து, முதலில் தாக்கினர். பின்னர் மின்சாரம் பாய்ச்சி தாக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் உயிரிழக்காத நிலையில், கடைசியில் கூர்மையான ஆயுதத்தால் இருவரின் கழுத்தையும் அவரின் தந்தை குருதியல் சிங் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கு பின், குருதியல் சிங் இரத்தக்கறை படிந்த ஆடையுடன் சில நிமிடங்கள் வீட்டு அருகே சுற்றித் திரிந்து, பிறகு நேராக ராம்தீர்த் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.