சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார். அவருடைய கார்டை பயன்படுத்தி 3 தவணைகளாக ரூ.11,870-ஐ திருடியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது ஸ்ரீவாசலு ரெட்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் ஆவார். இவர் ஏடிஎம் மையங்களில் தவறுதலாக கார்டுகளை மறந்து வைத்துவிட்டு செல்பவர்களின் கார்டுகளை நைசாக  திருடியுள்ளார். இதை வைத்து ஸ்வைப்பிங் மெஷின் மூலமாக குறிப்பிட்ட ஏடிஎம் கார்டுகளை மட்டும் பயன்படுத்தி பணத்தைத் திருடி வந்துள்ளார் என்பதை விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரிடம் இருந்து 64 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள. மேலும் இவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.