
தமிழ்நாடு முழுவதும் இயங்கும் உணவகங்கள், ஹோட்டல்கள், இனிப்பகங்கள், பேக்கரிகள், தெரு உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை உணவுப் பொருள் விற்பனைக்கான வணிகர்களும் பின்பற்ற வேண்டிய புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
துறை சார்பாக மாவட்ட வாரியாக அச்சு செய்தியும், அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய 14 முக்கிய கட்டுப்பாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை தவறப்பட்டால் முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டி நெறிமுறைகள்:
1. உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் https://foscos.fssai.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து பெற வேண்டும்.
2. தொழிலாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ்– டைஃபாய்டு, மஞ்சள் காமலை போன்ற நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
3. பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு பகுப்பாய்வு சான்றிதழ்– தரமான நீர் பயன்படுத்தப்படுகிறதா என உறுதிப்படுத்த வேண்டும்.
4. ஈக்கள்/பூச்சி தொல்லை இல்லாத முறையில் உணவு காட்சிப்படுத்தல்– கண்ணாடி பெட்டியில் மூடி வைத்திருக்க வேண்டும்.
5. உணவு எண்ணெய் மீள்பயன்பாடு தடை– ஒருமுறை மட்டுமே சமைக்க பயன்படுத்தலாம்; மீதமுள்ள எண்ணெய் FSSAI அங்கீகரித்த கொள்முதலாளரிடம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.
6. மீதமுள்ள உணவு தவிர்த்து விடுதல்– விற்பனையாகாமல் போன உணவு நுகர்வோருக்கு வழங்கக்கூடாது.
7. அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள் போட தடை– நியூஸ் பேப்பர், புக் பேப்பர் போன்றவற்றை பரிமாறவோ, பொட்டலம் போடவோ கூடாது.
8. பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு பாட்டிலிட தடை– அனுமதிக்கப்படாத நெகிழிப் பொருட்களில் சூடான அல்லது சாதாரண உணவு வைக்கக்கூடாது.
9. உணவகங்களில் வாழையிலை/அலுமினியம் ஃபாயில் மட்டுமே பயன்படுத்தல்– பிளாஸ்டிக் பரிமாறுதல் தடை செய்யப்பட்டுள்ளது.
10. உணவு எண்ணெய் லேபிள் இன்றி விற்பனை தடை– எந்தவொரு எண்ணெய்யும் சில்லறை (loose) முறையில் விற்பனை செய்யக்கூடாது.
11. உணவுக் கையாளுவோர் பாதுகாப்பு உபகரணங்கள்– கையுறை, தலைமுடி கவசம் போன்றவை தவறாமல் அணிய வேண்டும்.
12. பாட்டிலிடப்பட்ட உணவுகளுக்கு முழுமையான லேபிள் விபரங்கள்- FSSAI உரிமை எண் உள்ளிட்ட விவரங்களுடன் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி.
13. அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்– சமைப்பதற்கும், இனிப்புகள் தயாரிக்கவும் அயோடின் இல்லாத உப்பு தவிர்க்கப்பட வேண்டும்.
14. செயற்கை நிறமிகள் சேர்க்க தடை– சிக்கன்-65, கோபி-65, பஜ்ஜி போன்ற உணவுகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.
மேற்கூறிய நெறிமுறைகளை 14 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்
இந்த 14 விதிமுறைகளும் உணவகங்கள், விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து உணவு வணிகர்களும் 14 நாட்களுக்குள் தவறாமல் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் FSSAI சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், நுகர்வோரின் உணவுப் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி எடுக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.