ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் பதட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காமெனி தன்னை பின்வரும் வாரிசுகளாக 3 மதகுருமார்களை தேர்வு செய்துள்ளதாக “தி நியூயார்க் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

வாரிசு தேர்வு பின்னணி:
ஈரானில் மத ஆதிக்க அரசாட்சி அமைப்பின் உச்சப் பதவியான உச்ச தலைவர் பதவிக்காக, காமெனி மூன்று தலைவர்களை வாரிசு பட்டியலில் சேர்த்துள்ளார். இவர்களில்  அவரது மகனான மொஜ்தபா காமெனியில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முந்தைய பல  தகவல்களில், காமெனி தனது மகனை வாரிசாக தயார் செய்து வருகிறார் என்ற தகவல்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்த முறை அவர் மூன்று பெயர்களை தமது நிபுணர்கள் சபைக்கும் மதகுருமார்கள் சங்கத்துக்கும் பரிந்துரைத்துள்ளார். அவற்றில் ஒருவரை விரைவில் தேர்வு செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார், காரணமாக தற்போதைய போர் சூழ்நிலை அதனை அவசியமாக்கியுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் மோதலின் காரணம்:
1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு ஈரான் ஷியா இஸ்லாத்தை மையமாகக் கொண்ட அரசு அமைத்தது. இதனால், இஸ்ரேலை எதிர்த்து பாலஸ்தீனியரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்து வந்தது. இஸ்ரேல் அதை தன்னுடைய பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தலாகவே எடுத்துக் கொண்டுள்ளது. ஈரான் அணுசக்தி திட்டத்தையும், அதன் விருத்தியையும் இஸ்ரேல் கவலையுடன் கவனித்துவந்தது. இதனால், கடந்த காலங்களில் இஸ்ரேல் சைபர் தாக்குதல்களையும், பல அணு மையங்கள் மீது விமானத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரான் – இஸ்ரேல் மோதலை தொடர்ந்து அமெரிக்காவும்  நேற்று தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் , காமெனியின் உயிருக்கு அபாயம் இருக்கலாம் என உள்ளக தரப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து வாரிசு தேர்வில் சீறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாற்றம், ஈரானின் எதிர்காலத் திசையையும் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.