உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் அமைந்துள்ள டெல்லி-டூன் நெடுஞ்சாலையில் மூன்று இளைஞர்கள், பைக்கில் சென்று, அந்த வழியில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பெல்ட்களால் தாக்கும் வீடியோ ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு சமூக ஊடகங்களில் வைரலானது. 18 வினாடிகள் கொண்ட இந்தக் காணொளியில், அவர்கள் எந்த காரணமும் இல்லாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை அடிக்கும் காட்சிகள் தெளிவாக தெரிகின்றன. அந்த வீடியோவை அந்த வழியாக சென்ற ஒருவர் தான் செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இந்த வீடியோவின் அடிப்படையில், போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டனர். நியூ மண்டி காவல் நிலைய அதிகாரிகள், பைக் எண் மூலமாக மூன்று இளைஞர்களையும் அடையாளம் கண்டு கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் – சாகேத் காலனியில் வசிக்கும் அந்தரிக்ஷ் சவுத்ரி, மதின்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் காஷ்யப் மற்றும் சூரியால கிராமத்தைச் சேர்ந்த நதீம் என தெரியவந்துள்ளது. மூவரும் மாணவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

போலீசாரது விசாரணையில், ஏன் இந்த தாக்குதலை செய்தீர்கள் என கேட்டபோது, மூவரும் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.