
திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவுள்ளவர்கள் யாராவது மும்மொழி கல்வி கொள்கையை ஏற்பார்களா என்று கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலை பதிலடி கொடுக்கும் விதமாக உங்கள் மகன் இந்திய குடிமகனா இல்ல அமெரிக்க குடிமகனா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்லிவிட்டு உங்கள் மகன் எந்த பள்ளியில் படித்தார் என்பதை சொல்லுங்கள்.
உங்கள் மகன் மூன்று மொழி கற்பிக்கக் கூடிய பள்ளியில் படிக்கிறார் என்றால் அப்போது உங்களுக்கும் அறிவில்லை என்று தானே அர்த்தம் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்னுடைய மகன்கள் இரு மொழி கல்வியை தான் படித்தார்கள் என்றார். இதற்கு தற்போது அண்ணாமலை பதிலடி கொடுத்து ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார் அதில்,
நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் திரு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம் இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ் இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? வெளங்கிடும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம்.
அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்? அண்ணன் பிடிஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.