வடிவேலுவின் தாயார் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்..

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் வடிவேலு. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி என்கின்ற பாப்பா உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது 87. வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு ஆகிய காரணங்களால் மதுரை வீரகனூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்தீஸ்வரி காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வடிவேலுவின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி. நடிகர் வடிவேலு அவர்களின் அன்பு தாயார் திருமதி சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை வீரகனூரில் உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். வைகைப்புயல் திரு வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.