
உத்தரபிரதேச மாநிலம் ஹாப்பூரில் ரயில் தண்டவாளத்தில் பைக்குகளை நிறுத்தி, டயர்களில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து ரீல் எடுத்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்-குர்ஜா ரயில் பாதையில் சந்த்சாரா ஹால்ட் அருகே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) அதிரடியாக செயல்பட்டனர்.
தருண் கோஸ்வாமி, ஷாஹித் மற்றும் ஷாஜாத் ஆகிய மூவரும் ஹாப்பூரில் உள்ள பஃபுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் 153-ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பயன்படுத்திய இரண்டு பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஆபத்தான செயல்கள் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இவ்வாறு ரயில் பாதையில் வீடியோ எடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என RPF சப் இன்ஸ்பெக்டர் அனில் குமார் தெவதியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ये मनबढ़ रेलवे ट्रैक पर रील बना रहे है, बाइक के टायर में इन्होंने पेट्रोल डाल आग लगा दी.
इन्हें कायदे की इलाज की जरूरत है. pic.twitter.com/s1MiyG55NW
— Priya singh (@priyarajputlive) June 12, 2025
இன்று சமூக ஊடகங்களில் பிரபலமாவது என்பதற்காக பலர் உயிருக்கு ஆபத்தான செயலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது போன்ற வீடியோக்கள் மக்கள் கவனத்தை ஈர்த்தாலும், சட்டத்தை மீறுவதோடு, பொது பாதுகாப்புக்கும் ஆபத்தானது என்பதை பொது மக்களும் இளைஞர்களும் உணர வேண்டும் என்பதே அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது.