உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள முகல்சராய் கோத்வாலி பகுதிக்குட்பட்ட ஜிடி சாலையில், பொதுப்பணித்துறை சார்பில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தச் சாலை அகலப்படுத்தும் திட்டத்திற்காக, அங்கு சாலையோரத்தில் இருந்த பழமையான காளி கோவில் ஒன்றை இடிக்கும் பணியில் அதிகாரிகள் சனிக்கிழமை அன்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளோ அல்லது தடுப்பு வளையங்களோ அமைக்கப்படாமல் கோவில் கோபுரப் பகுதி இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இடிப்பின் போது எதிர்பாராதவிதமாக அக்கோவிலின் பிரம்மாண்டமான கோபுரக் கலசம் திடீரென பெயர்ந்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான சாலையில் அதிவேகமாக உருண்டு வந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை ஊழியரான 58 வயது பல்தேவ் யாதவ் என்பவர் மீது இடிபாடுகள் பலமாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் சக ஊழியர்கள் பலரும் இந்த இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகிப் பரவி வரும் சூழலில், அதிகாரிகளின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனப் புகார் எழுந்துள்ளதால், இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.