மக்களவையில் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்நிலையில் கடந்த கால பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை தற்போது பார்க்கலாம். இந்தியாவின் முதல் பட்ஜெட் கடந்த 1860-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிழக்கிந்திய கம்பெனி சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1947-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அப்போதைய நிதி அமைச்சர் சண்முக செட்டி என்பவரால் முதல் முறையாக பட்ஜெட் சாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு பட்ஜெட் உரை தான் மிக நீளமானது. அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 42 நிமிடங்களுக்கு உரையாற்றினார். கடந்த 1991-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பட்ஜெட் தாக்கல் செய்தபோது 18650 வார்த்தைகள் இருந்தது.

இதுதான் அதிக வார்த்தைகள் கொண்ட பட்ஜெட். இதேபோன்று கடந்த 1977-ம் ஆண்டு ஹூருபாய் முல்ஜுபாய் படேல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 800 வார்த்தைகள் இருந்த நிலையில் அதுதான் மிகச் சிறிய பட்ஜெட். இந்தியாவில் அதிக பட்ஜெட்டுகள் (10) தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாய் சேரும். இவருக்கு அடுத்தபடியாக 9 பட்ஜெட்டை சிதம்பரம் தாக்கல் செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது டிஜிட்டல் முறையிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 92 வருடங்களாக ரயில்வே பட்ஜெட் தனியாகவும் பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்படுகிறது.