கேதன் அகர்வால் என்ற 25 வயது ரியல் எஸ்டேட் அதிபரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல், பத்திரிகையாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களைப் பெற்றது.

மேலும் இதற்கு விளக்கம் அளித்துள்ள சியாவின் தந்தை பிரவீன் கோயல், தனது மகள் ஊடகத்தினரை அவமதிக்க அவ்வாறு செய்யவில்லை என்று கூறியுள்ளார். அவள் போலீஸ் வாகனத்திற்குள் ஏறும் போது, எதிர்பாராதவிதமாக காரின் கதவு அவளது கையில் மோதியதில் நடுவிரலில் காயம் ஏற்பட்டதாகவும், அதனால் தான் அவள் தன் விரலை அப்படி வைத்திருந்தாள் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“>

இந்தக் கொலை வழக்கில் சியா கோயல் மற்றும் அவரது காதலர் என்று கூறப்படும் சேத்தன் சவுத்ரி ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். வரும் நவம்பர் மாதம் சியாவுக்கும், கொல்லப்பட்ட கேதனுக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில், கடந்த ஜூன் 18 அன்று புனேவில் உள்ள லோஹாகர் கோட்டையின் செங்குத்தான பகுதியிலிருந்து கேதனை கீழே தள்ளி அவர்கள் கொலை செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ள இவ்விருவரும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களது மொபைல் போன்களில் இருந்து அழிக்கப்பட்ட குறியீட்டு வார்த்தைகள் மற்றும் எமோஜிகள் அடங்கிய உரையாடல்களைப் புனே போலீசார் மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.