மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்.வி.சேகர் மந்தை வெளியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்.வி.சேகர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர் அவரது செல்போனில் தொடர்புகொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து எஸ்.வி.சேகர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இது தொடர்பாக எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது, கடந்த 22-ம் தேதி மதியம் வீட்டில் இருந்தபோது என் செல்போனில் ஒருவர் தொடர்புக்கொண்டு என்னை ஒருமையில் ஆபாசமாக தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்கள் கூறுவதாக சொல்லி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

என் வீட்டில் ஏற்கனவே 2 முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடைபெற்றது. இதனிடையே நான் இந்துத்துவாவுக்கு ஆதவராக பேசி வருவதாக அடிக்கடி அச்சுறுத்தல் வருகிறது. இந்நிலையில் எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொண்டனர். என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் காவல்துறையினரே பொறுப்பு” என்று அவர் கூறினார்.