மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வாவின் தாய் கோலியை கட்டிப்பிடித்து முத்தமிடும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது..

வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வாவின் தாயார் விராட் கோலியின் தீவிர ரசிகை ஆவார். இந்நிலையில் தற்போது இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் தனது சொந்த மகனுக்குப் பதிலாக முன்னாள் இந்திய கேப்டன் கோலியை பார்க்க வந்தார்.

அதன்படி வெள்ளியன்று நடந்த  இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது நாள் ஆட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண் தனக்குப் பிடித்த வீரரைப் பார்த்தபோது, டா சில்வாவின் தாயின் கனவு இறுதியாக நிறைவேறியது. மூத்த பத்திரிக்கையாளர் விமல் குமார் எடுத்த வீடியோவில், இந்திய வீரர்கள் பேருந்தில் ஏறி மீண்டும் ஹோட்டலுக்கு செல்லவிருந்தனர். அப்போது கோலியை டா சில்வாவின் தாயார் கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில நொடிகள் உரையாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

முன்னதாக கோலியைப் பார்ப்பதற்காக தனது தாயார் போட்டியை காண வருவதாக விராட் கோலியிடம்  மகனும் விக்கெட் கீப்பருமான ஜோசுவா பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த கோலியிடம் கூறியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது வைரலானது குறிப்பிடத்தக்கது..

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் கோலியின் 121 மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் அரைசதங்களில் இந்தியா 438 ரன்களை குவித்தது. பின்னர் பதிலுக்கு ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 2 ஆம் நாள் முடிவில் 86/1 என இருக்கிறது. 3வது நாள் ஆட்டம் இன்று இந்திய நேரப்படி 7: 30 மணிக்கு தொடங்கும். இப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி தனது 500-வது சர்வதேச ஆட்டத்தில் சதம் (29வது டெஸ்ட் சதம்) அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..