மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் உன்னி முகுந்தன் தற்போது மாளிகபுரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒரு சிறுமி செல்ல ஆசைப்படும்போது அந்த சிறுமி இறுதியாக எப்படி கோவிலுக்கு செல்கிறாள் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜனவரி 26-ம் தேதி தமிழில் ரிலீஸ் ஆகிறது. இதை முன்னிட்டு சென்னையில் மாளிகபுரம் படக்குழுவினருடன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது மாளிகபுரம் படத்தில் இரண்டு பாடல்கள் எழுதிய ஆர்.வி உதயகுமார் பேசினார்.

அவர் பேசியதாவது, இந்த படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவேன் என்று நினைக்கவில்லை. நான் பாடல்கள் எழுதியதற்கு ஐயப்பனின் அருள் தான் காரணம். இப்போது வரும் பெரிய திரைப்படங்களை உணர்வு ரீதியாக இயக்குவது இல்லை. அந்த வகையில் தற்போது மாளிகபுரம் திரைப்படம் உணர்வு ரீதியாக இருக்கிறது. தற்போது பலரும் தியேட்டர்களுக்கு செல்ல பயப்படுகிறார்கள். ரசிகர்களின் பயங்கரவாதம் மொழிந்தால் தான் திரைப்படங்கள் ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் பாரதிராஜாவின் படங்கள் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற உணர்வு நீதியான படங்கள் எதிர்காலத்தில் வரவேண்டும் என்று கூறினார்.