தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தன் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்துவரும்  நிலையில் மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் கேஜிஎஃப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் யஷ் தற்போது இயக்குனர் கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்க இருக்கும் நிலையில், நடிகை கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் சில காரணங்களால் நடிகை கரீனா கபூர் படத்திலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக நயன்தாராவை  நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். அதன்படி நடிகர் யஷ்ஷூக்கு அக்காவாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் படத்தின் கதை பிடித்து விட்டதால் அவர் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அக்காவாக நடிப்பதற்கு நயன்தாரா ரூ.20 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு படத்தில் ரூ. 10 முதல் 11 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா தற்போது இரண்டு மடங்கு அதிக சம்பளம் கேட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.