தான் யாருக்காக மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழிநடத்த முயன்றேன் என்பது குறித்து முன்னாள் பேராசிரியை நிர்மலாதேவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி நிர்மலாதேவி மேல்முறையீடு செய்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கடந்த 2018ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை பாலியல் பேரம் பேசி தவறான பாதைக்கு அழைத்தாக நிர்மலாதேவி பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த வழக்கில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், நிர்மலாதேவிக்கு ஏப்.30ஆம் தேதி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.