திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக தரப்படும் லட்டு குறித்து முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அப்போது கூறுகையில் திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தில் பசு நெய்யில் அதிக கலப்படம் இருந்ததாகவும் தரம் குறைவாக இருந்ததாகவும் பல வருடங்களுக்கு முன்பே கவனித்தேன் என கூறியுள்ளார். இது தொடர்பான புகாரை கோவில் அறக்கட்டளை தலைவரிடம் கூறினேன். ஆனால் எனது புகாரை அவர்கள் கவனிக்கவில்லை என கூறினார்.

இந்நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தது. கோவில் பிரசாதம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதாக உறுதியளித்தது. இதனால் சுத்தமான முறையில் பிரசாதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் கடந்த 5 ஆண்டுகளாக லட்டில் விலங்கு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெயை கலந்து மகா பாவம் செய்து விட்டனர் எனக் கூறியுள்ளார். கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையும் பக்தியும் கொண்டுள்ள புண்ணிய கோவிலில் இது போன்ற தவறுகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஆகம சாஸ்திரத்தில் இருப்பது போல திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடுகள் நடத்தப்படவில்லை எனவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.