
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அருமை தோழர்களே… புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்தி அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என்று நம்பினார். அதை மக்களிடத்திலே படையல் செய்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்தி அதிகாரத்தை வென்றெடுக்க முடியும், அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடியும், அதிகாரத்தை கைப்பற்ற முடியும், இந்த நம்பிக்கையை விதைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
அம்பேத்கரின் மாணவனாக இந்த களத்திலேயே நாம் நிற்கிற போது, இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் முறையாக பயன்படுத்தாமல் தவறி விடக்கூடாது என்கின்ற உணர்வு, அந்த வேட்கை, அந்த முனைப்பு, அந்த துடிப்பு நமக்கு வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால்? இப்போதுதான் உருவாகி இருக்கின்றது. ஒரு சமூக இயக்கம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசுவதோடு நின்று விடலாம். சாதி பிரச்சனைகளை பேசுவது, சமூக உரிமைகளை பற்றி பேசுவது, மனித உரிமைகளை பற்றி பேசுவது, சாதி ஒழிப்பை பற்றி பேசுவது. அதோடு நின்று விடலாம். வேறு இலக்கு தேவையில்லை. அது ஒரு சோசியல் ஆர்கனைசேஷன்.
ஒரு பண்பாட்டு இயக்கம். நமக்கான பண்பாடு எது ? என்பதை கண்டுபிடிப்பதிலேயே கவனம் செலுத்தலாம். விழாக்களை நடத்தலாம். எனக்கு இந்த பண்பாடு இல்லை, இந்த பண்பாடு தான் என்று அடையாளம் காணலாம். அடையாளப்படுத்தலாம். நாங்கள் இந்த மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. எங்களுக்கும், இந்த பண்டிகையும் சம்பந்தமில்லை என்று பேசலாம். எங்களுக்கு ஒரு பண்பாடு இருக்கிறது. அது பௌத்த பண்பாடு என்று அடையாளம் காணலாம்.
மதம் சார்ந்த பண்பாட்டு தளங்களில் பணியாற்றுகிற ஒரு இயக்கம் பண்பாட்டு இயக்கம். அத்தோடு நின்று விடலாம், பிரச்சனைகள் இல்லை. ஆனால் ஒரு அரசியல் இயக்கம் வெறும் சமூகப் பிரச்சனைகளையும், பண்பாட்டு பிரச்சனைகளையும் பொருளாதார சிக்கல்களையும் பேசிவிட்டு கடந்து போய்விட முடியாது. கடந்து போகவும் கூடாது. அப்படி என்றால்? அது அரசியல் இயக்கமாக இருக்க முடியாது. ஒரு அரசியல் இயக்கம் ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும்.
அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும். அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது, அதிகாரத்தை கைப்பற்றுவது, இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு கூட்டணியில் இணைந்து இரண்டு தொகுதிகளை பெற்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவது அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கை. அது பவர் ஷேர். அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது. அது ஒரு தொடக்க நிலை. அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதோடு மட்டுமில்லாமல், அதிகாரத்தை கைப்பற்றுவது, பவர் கேப்சர்.
முதல்வராவது, பிரதமராவது, ஆட்சி பீடத்தில் அமர்வது. இதுதான் ஒரு அரசியல் இயக்கத்தின் நோக்கமாக இருக்க முடியும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடக்க காலத்திலே எவ்வாறு அடையாளம் காணப்பட்டது ? ஒரு தலித் இயக்கம். தலித் என்பது சாதி இல்லை என்றாலும், ஒரு ஜாதி அடையாளம். விடுதலை சிறுத்தை கட்சி தொடக்க காலத்தில் ஒரு சமூக இயக்கமாக இருந்தது, உண்மை. செயல்பட்டது உண்மை. ஆனால் ஒரு சமூக இயக்கமாக இருந்து கொண்டு அரசியல் களத்திலே வெற்றி பெற முடியாது. ஒரு பண்பாட்டு இயக்கமாக இருந்து கொண்டு அரசியல் களத்தில் வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.