
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் மூர்த்தி (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த 10 வருடங்களாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிகள் திறந்த நிலையில் மூர்த்தி தன்னுடைய சலூன் கடையில் ஒரு அதிரடியான சலுகையை அறிவித்துள்ளார். அதாவது தன்னுடைய சலூன் கடையில் ஒரு ரூபாய்க்கு மாணவர்களுக்கு முடிவெட்டப்படும் என்று அவர் எழுதி ஒட்டி இருந்தார்.
இதைப் பார்த்த மாணவர்கள் அவரது கடைக்கு ஆர்வத்துடன் சென்றனர். இது பற்றி மூர்த்தி கூறும் போது வழக்கமாக சிறுவர்களுக்கு முடி வெட்டுவதற்கு 80 ரூபாய் வாங்கும் நிலையில் ஏழை மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பதை கணக்கில் கொண்டு ஒரு ரூபாய்க்கு முடி வெட்ட முடிவு செய்தேன்.
60 மாணவர்கள் முடிவெட்டி கொண்டார்கள் என்று கூறினார். இந்த வருடம் தான் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்ததாக அவர் கூறிய நிலையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் இலவசமாக முடிவெட்டி வருவதாக தெரிவித்தார். மேலும் அவரது செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.