உத்திரபிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் ஜைத்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ராஜேஷ் மற்றும் பூபேந்திரா என்ற இருவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த 2021 ஆம் ஆண்டு சுமத்தியிருந்தார்.

இந்த வழக்கிற்கான விசாரணை லக்னோவில் உள்ள BKT வட்ட விசாரணை அதிகாரிக்கு மாற்றப்பட்ட நிலையில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையான காரணம் வெளிச்சத்திற்கு வந்தது. அதன்படி அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நிரபராதிகள் என்று காவல்துறையினர் கண்டறிந்தனர்.

தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் தரப்பில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் 2 பேர் மீது பொய் புகார் அளித்த பெண்ணுக்கு 7.5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 2லட்சத்து ஒரு ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதோடு ராஜேஷ் மற்றும் பூபேந்திரா இருவரும் நிரபராதிகள் என்றும், அவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதில் பூபேந்திரா என்பவர் உயிரிழந்ததால் அவருடைய வாரிசுகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் வருங்காலத்தில் பொய் வழக்குகளை தடுக்க உறுதியான முனைப்பை எடுத்துக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.