தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கேத்துரெட்டிபட்டி கிராமத்தில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி அஜித்குமார் மது குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் உமாராணி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அஜித்குமார் தனது மாமனார் வீட்டிற்கு சென்று உமாராணியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டார்.

அதற்கு சம்மதித்து பெற்றோர் உமா ராணியை சமாதானம் செய்து கணவருடன் அனுப்பி வைத்தனர். நேற்று மன உளைச்சலில் இருந்த உமாராணி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உமாராணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.