
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பாண்டி, ஜெயப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையில், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜெயப்பிரியா மீண்டும் கருவுற்றுள்ளார். கடந்த 21-ம் தேதி டெலிவரிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் ஆண் குழந்தை பிறந்ததோடு, ஜெயப்பிரியாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதில் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவருக்கு கர்ப்பப்பையும் அகற்றப்பட்டது. பின்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயப்பிரியா மருத்துவர் கண்காணிப்பில் இருந்துள்ளார். ஆனால் நேற்று ஜெயப்பிரியாவின் சிறுநீரகம் மற்றும் உடல் உறுப்புக்கள் செயலற்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவரின் அலட்சியத்தால் தான் ஜெயப்பிரியா உயிரிழந்தார் என்று குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது காவல்துறையினர் கூறியதாவது, புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றார்கள். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலர் கூறியதாவது, குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகு அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் இங்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். உறவினர்களின் அனுமதி பெற்ற பின்பே பெண்ணின் கர்ப்பப்பை அகற்றப்பட்டது என்று தெரிவித்தனர்.