
கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சில காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள நரசீபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக கிராமத்திற்குள் சுற்றி தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த யானை இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று வீட்டில் உள்ள ரேஷன் அரிசி மற்றும் புண்ணாக்கு போன்றவற்றை சாப்பிட்டு செல்கிறது.
நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் அமைந்துள்ள விவசாயி பாலுவின் வீட்டிற்கு சென்ற யானை அவருடைய வீட்டில் சுற்றுசுவரின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றது. அங்கு வீட்டின் முன் பகுதியில் மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தவிடு மற்றும் நிலக்கடலை கொடியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அதனை பார்த்த பாலுவின் குடும்பத்தினர் அச்சத்தில் வெளியே வராமல் இருந்தனர். அவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும் போது, வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
அதோடு குடியிருப்பு பகுதிகளில் புகுந்து மாடுகளுக்காக வைக்கப்பட்டிருக்கும் தீவனங்களையும் சாப்பிட்டு விட்டு செல்கிறது என தெரிவித்தனர். மேலும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.