
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராத் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 123 போட்டிகள் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9230 ரன்கள் குவித்துள்ளார்.
தற்போது அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், பல முன்னணி வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, பாஜி, நான் உங்களுக்காக எழுதும் எதுவும் நான் என்ன உணர்கிறேன் அல்லது நீங்கள் என் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை ஒருபோதும் பிரதிபலிக்காது.
நான் 13 வயதாக இருக்கும்போது நீங்கள் பேட்டிங் செய்வதை பார்த்து, அந்த வகையான ஒரு ஆற்றலை எப்படி மைதானத்திற்கு கொண்டுவர முடியும் என்று யோசித்தது முதல் உங்களுடன் மைதானத்தை பகிர்ந்து கொண்ட போது நீங்கள் செய்வதை யாராலும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தது வரை, நீங்கள் ஒரு தலைமுறையை மட்டும் ஊக்கப்படுத்தவில்லை மில்லியன் கணக்கான மக்களின் மனநிலையை மறுவடிமைத்துள்ளீர்கள்.
டெஸ்ட் கிரிக்கெட் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். எங்கள் தலைமுறை உங்களைப் போன்ற நெருப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். நீங்கள் அளித்த எல்லாவற்றிற்கும் நன்றி, ஓய்வுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.