தமிழக துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும், இயக்குனர் கிருத்திகாவுக்கும் கடந்த 2002-ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இன்பநிதி, தன்மையா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இன்பநிதி கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கல்லூரியில் நிதி நிர்வாகம் தொடர்பாக படித்து வந்தார். மேலும் கால்பந்து வீரரான இவர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். எனினும் கடந்த ஆண்டு முதல் திமுக நிகழ்வுகளில் இன்பநதி கலந்து கொள்ள தொடங்கினார்.

கடந்த ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் உதயசூரியன் சின்னம் பொறித்த சட்டையை அணிந்து இன்பநிதி கலந்து கொண்டார். பொங்கல் விழாவின்போது ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற போதும் அதை உடையில் இருந்தார். மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து கண்டு களித்தார். ஆனால் இதுவரை இன்பநிதி இதுவரை நேரடி அரசியலில் இறங்கவில்லை. தற்போது கல்லூரி படிப்பை முடித்த இன்பநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இயங்கும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகப் பிரிவில் பணிபுரிய தொடங்கியுள்ளார்.

கடந்த ஜூன் மூன்றாம் தேதி முதல் அவர் அந்த பிரிவில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. துர்கா ஸ்டாலினின் சகோதரி மகன் கார்த்திகேயன் தான் இங்கு தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 11 மணிக்கு அலுவலகம் வரும் இன்பநிதி, மாலை 5 மணி வரை அங்கிருந்து பணிகளை கவனித்து வருகிறார். கலைஞர் தொலைக்காட்சியின் நிதி நிர்வாக பணிகள் தொடர்பாக அங்கு பணி புரியும் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.