பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று 4ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து, ‘உழவர்களை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட்’ என்ற தலைப்பின் கீழ் இதனை வாசித்து வருகிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன்படி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 2482 கிராம ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்களை கண்டறிந்து பாசன நீர் ஆதாரங்கள் உருவாக்கி சாகுபடிக்கு கொண்டு வரும் திட்டங்களை அரசு செயல்படுத்தும் என தெரிவித்துள்ளார்.