தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகிற ஏப்ரல் 21-ந் தேதி முதல் மே 1-ந் தேதி வரை 4-வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மேலும் இந்த திருவிழாவின் கடைசி 4 நாட்கள் நெய்தல் திருவிழா மற்றும் உணவுத்திருவிழா நடைபெறும் நிலையில், விழாவை முன்னிட்டு தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டியும் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிக்கு தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவுச் சின்னங்கள், தாமிரபரணி ஆற்றின் இயற்கை எழில்கள், இம்மாவட்ட  மக்களின் வாழ்வியல், சமூகத்தின் பிரதிபலிப்புகள், பசுமை போர்த்திய வயல்வெளிகள், மக்களின் தினசரி வேலைசார்ந்த நிகழ்வுகள், தொழில் சார்ந்த படைப்புகள், தனிநபர்களின் வித்தியாசமான அணுகுமுறைகள், சுற்றுப்புறச்சூழலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் என அனைத்து வகையான புகைப்படங்களையும் எடுத்து அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். மேலும் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தாங்கள் எடுத்த புகைப்படங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கும் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அதிகபட்சமாக 5 புகைப்படக்களை ஒரு நபர் எடுத்து தேர்வு செய்ய அனுப்பலாம். எனவே புகைப்படக் கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் விருப்பம் இருந்தால் தங்களது புகைப்படங்களை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர்  கூறியுள்ளார்.