மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான தொகுதியையும் தாண்டி முன்னிலை பெற்றது. இதனால் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மகாராஷ்டிராவை சின்ன இந்தியா என்று கூறலாம். அம்மாநிலத்தில் பலதரப்பட்ட மக்களும், இந்தியாவில் உள்ள மக்களும் கணிசமான மக்கள் தொகையோடு வாழக்கூடிய மாநிலம் தான் மகாராஷ்டிரா. இதனால் பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக வெற்றி சரித்திர வெற்றி ஆகும்.

ஜார்க்கண்ட் ஹேமந்த் சோரன் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அதுவும் நிரூபிக்கப்பட்டதாகும். ஆனால் அவர் ஏதோ ஒரு தேர்தலுக்காக கைது செய்யப்பட்டது போல கூறுவது தவறு. ஆனாலும் மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன், குறைத்து மதிப்பிடவில்லை. உண்மையிலேயே பாஜக கட்சி போன தடவை இருந்ததை விட, தற்போது ஜார்கண்டில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. 2 மாநிலங்களிலுமே மக்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி மற்றும் சரத் பவார் பிரச்சாரம் கொஞ்சம் கூட எடுபடவில்லை. இன்று யாராலும் வெல்ல முடியாத அளவிற்கு பாரத பிரதமர் இருக்கிறார் என்பதை நான் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.