
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த மீனூர் கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழ் குமரன் (18). இவர் அப்பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கடந்த மே 21 ஆம் தேதி அன்று தமிழ் குமரன் வீட்டில் காலை முதல் மின்சாரம் இல்லை. இதுகுறித்து மின்வாரியத்திற்கு புகார் அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே அவர் வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தில் தானே ஏறி மின் இணைப்பை சரி செய்ய முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தமிழ் குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.