பாகிஸ்தான் தனது அணு ஆயுத சாதனையை நினைவு கூறும் முக்கியமான ‘யுக்ம்-இ-தக்பீர்’  தினமான மே 28 அன்று, கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் கூட இல்லையென்ற சோகம் நிறைந்த வீடியோவொன்றை பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹினா பயத் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விமான நிலைய கழிப்பறைகளில் கூட தண்ணீர் வரவில்லை என வேதனையுடன் பேசும் ஹினா, “இன்று நாம் பாகிஸ்தானின் பெருமைபடைத்த அணு ஆயுத சாதனையை நினைவுகூரும் நாளாகக் கொண்டாட வேண்டும். ஆனால் நான் நின்றிருக்கும் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில், மக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. பெற்றோர்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள், இறை வழிபாடு செய்யும் மக்கள் வருகிறார்கள், ஆனால் இங்கு அடிப்படை வசதி கூட இல்லை,” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், “புதிய திட்டங்கள், பாகிஸ்தான் ரயில்கள் என்று பெருமையாக பேசுகிறோம். ஆனால் ஏற்கனவே உள்ள நிறுவனங்களை பராமரிக்க முடியவில்லையெனில் என்ன பயன்? ஒரு சர்வதேச விமான நிலையத்தில் கூட தண்ணீர் இல்லாத நிலைதான் நம் நாட்டின் உண்மை நிலையை சொல்கிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமான விஷயம்,” என விமர்சனம் தெரிவித்தார். இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியிருக்கும் நிலையில், பாகிஸ்தானில் தண்ணீருக்கு  குறைபாடு ஏற்பட்டிருப்பது குறித்து இவ்வாறு நடிகை நேரடியாக விமர்சனம் செய்திருப்பது, சமூக வலைதளங்களில் வெகுவாக கவனத்தை பெற்றுள்ளது.