
திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், திமுக-வை கண்டித்து 15 வேலம்பாளையம் சிறுபூலுவப்பட்டியில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ ஜெயராமன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, திருப்பூர் மாநகராட்சியில் குப்பை வரி, சொத்துவரி என திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மக்களுக்கு கஷ்டம் காலம் தான்.
இங்குள்ள தொழில் அனைத்தும் ஒடிசா, மத்திய பிரதேசம், பீகார் என வெளி மாநிலங்களுக்கு போகிறது. அங்குள்ள தொழிலதிபர்களுக்கு மின் கட்டண சலுகை, வட்டியில்லா கடன் என ஏராளமான சலுகைகளை அந்த மாநில அரசு வழங்கியுள்ளது.
இதன் காரணமாக திருப்பூரில் உள்ள பெரும்பாலான தொழில் அந்த மாநிலங்களுக்கு செல்வதாக தொழிலதிபர்கள் தெரிவித்தனர். ஆனால் நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒவ்வொரு நாடாக சென்று அங்குள்ள தொழிலதிபர்களை தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என்று கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்தாக இருக்கிறது.
எங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கி, மக்களுக்கு வேலை வாய்ப்பு தாருங்கள் என்று மத்திய பிரதேச முதலமைச்சர்கள் திருப்பூர் வந்து அழைக்கிறார். பீகார் முதலமைச்சர் கோவை வந்து அழைக்கிறார்.
ஆனால் நமது முதலமைச்சர் இங்கிருக்கும் தொழிலதிபர்களை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஒப்பந்தம் போட்டு ஏதோ வெளிநாட்டினர் இங்கு வந்து புதிதாக தொழில் தொடங்குவது போல நாடகம் நடத்தி வருகிறார்.
9 அம்மாவாசைகளில் இந்த நாடகம் முடிவுக்கு வரப்போகிறது. விரைவில் லஞ்சம், ஊழல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி, நல்லாட்சி அமைத்திட நாம் அனைவரும் கடமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.