மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஒரே நம்பர் பிளேட்டில் 2 கார்கள் நுழைந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாஜ் ஹோட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, 2 கார்களையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இந்த நம்பர் பிளேட் சாகிர் அலி என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. சாகிர் அலி அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு வந்துள்ளது.

அவர் செல்லாத இடத்தில் கூட போக்குவரத்து விதிகளை மீறியதாக அவருக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனால் அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவரது நம்பர் பிளேட் கொண்ட காரை தாஜ் ஹோட்டலில் சாஹிர் அலி பார்த்து, அதை நிறுத்த முயற்சித்தார். பின்னர் காவல் துறையினர் 2 காரையும் நிறுத்தி உள்ளனர். சாகிர் அலியின் கார் பதிவு எண் MH01EE2388 என்றும், மற்றொரு காரின் பதிவு எண் MH01EE2383 ஆகும். காருக்காக வாங்கிய கடனை கட்ட முடியாததால் தனது காரின் கடைசி நம்பரை 8 என்று மாற்றி உள்ளதாக மற்றொரு கார் ஓட்டுனரின் உரிமையாளர் கூறினார். இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.