
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில், பாரம்பரியங்களை மீறிய ஒரு அதிர்ச்சிக்கரமான திருமண சம்பவம் வெளியாகியுள்ளது. இங்கு, ஒரு கணவர் தனது மனைவியின் விருப்பத்திற்கிணங்க, அவரது காதலனையே திருமணம் செய்து வைத்தார். இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
சர்பதாஹா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜாங்கிபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் பிந்த், கடந்த 2023ம் ஆண்டு ரீட்டா என்ற பெண்ணை மணந்தார். திருமணத்திற்கு முன்பே ரீட்டாவுக்கு சௌரப் என்ற இளைஞருடன் காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒருமுறை காதலருடன் ஓடிய ரீட்டா, பிறகு வீடு திரும்பியபோது, குடும்பத்தினர் அமல்படுத்திய அழுத்தத்தினால் அரவிந்தை மணந்தார்.
திருமணத்திற்குப் பிறகும் ரீட்டாவின் காதல் தொடர்ந்தது. தனது கணவருடன் வாழ முடியாது, சௌரப்புடன் தான் வாழப்போகிறேன் இல்லையெனில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இதனால், அரவிந்த் தன்னைக் காப்பாற்றும் நோக்கில், மனைவி சமைத்த உணவைக் கூட சாப்பிட முடியாமல் வெளியே சாப்பிடுவதை வழக்கமாக்கினார்.
விவாகரத்திற்குப் பிறகு பல முறை மீண்டும் காதலனுடன் ரீட்டா ஓடி சென்றதையும், அவரது பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்ததையும் தொடர்ந்து, அரவிந்த் மனதளவில் முற்றிலும் தளர்ந்துவிட்டார். ஜூன் 12 அன்று ரீட்டா மீண்டும் தற்கொலை மிரட்டலைத் தொடர, அதே வார திங்கட்கிழமை, ரீட்டா மற்றும் சௌரப்பின் திருமணத்தை ஏற்பாடு செய்தார்.
அங்குள்ள துர்கா கோவிலில், ரீட்டாவின் அக்கா மற்றும் மைத்துனர் முன்னிலையில், ரீட்டா, சௌரப் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். இதை வலைதளங்களில் பகிர்ந்த சிலர், கணவரின் அமைதியான முடிவை பாராட்ட, சிலர் மனைவியின் நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
அரவிந்த் கூறுகையில், “நான் என் மனைவியை தங்க வைப்பதற்கு முயன்றிருந்தால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வார். அந்த பாதிப்பில் என் குடும்பமே சிக்கி, என் வாழ்க்கையே பாழாகும். அதைவிட, அவர் விருப்பத்திற்கு ஏற்ப வாழட்டும் என்பதற்காக அவளுக்கு திருமணம் செய்து வைத்தேன்” என்றார்.
இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் “நீல டிரம் பயம்” என சிலர் விமர்சிக்க, மற்றவர்கள் இந்தப் பாரம்பரியத்தைக் கடந்த முடிவை பாராட்டுகிறார்கள். இது போன்ற சம்பவங்கள், குடும்ப உறவுகளில் ஏற்படும் நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாக பலரால் கருதப்படுகிறது.
இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மேலும் தீவிரமாக பேசப்படும் என்றே தெரிகிறது.