
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். யார் கபளீகரம் செய்ய முயற்சி செய்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். பாஜக அதிமுக இடையே இணைப்பு உள்ளதே தவிர பிணைப்பு இல்லை.
திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது திடீரென என்ன பாசம் என்று அன்புமணி ராமதாஸ் கேட்கிறார். பாசம் என்பது ஒரு வலிமையான வார்த்தை. நாங்கள் குறிப்பிட்டது அந்த அடிப்படையில் அல்ல, தந்தை மகனுக்கு இடையே இடைவெளி பெரிதாகி விடக்கூடாது என்பதில் சொல்லப்பட்ட ஒரு பொறுப்பான வார்த்தை தான். தந்தைக்கு இருக்கும் அனுபவம் ஆளுமையை அன்புமணி பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பாமக இங்கே எளிய மக்களுக்காக போராடுகிற கட்சி என்பதால் அவர்கள் இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்படக்கூடாது. அந்த இடைவெளியை பயன்படுத்தி பாசிச சக்திகள் உள்ளே நுழைந்து விடு கூடாது. சனாதான சக்திகள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறினார்.