உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மொரோபாத்தில் பரித்நகர் கிராமத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  இரவு சைவம் மற்றும் அசைவம் இரண்டு வகையிலும் விருந்துகள் பரிமாறப்பட்டது. இந்த விழாவில் சுமார் 400 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அதில் இனிப்பு வகையான கேரட் அல்வா பரிமாறப்பட்டுள்ளது.

இந்த இரவு விருந்து சாப்பிட்டபின் உறவினர்கள் சிலருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விருந்தில் கலந்து கொண்ட விருந்தினர்களில் 150 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி, குமட்டல் போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்த தாகூர்வாரா தொகுதியின் முன்னாள் தலைவர் நோயாளிகளை மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அதன் பின் அனைவரும் நலமாக உள்ளனர் எனக் கூறியுள்ளார். இது குறித்த விசாரணையில் கேரட் அல்வாவில் பயன்படுத்தப்படும் கோவா எனும் மூலப்பொருள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது.