
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியில் தரை இறங்கியது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டறிந்த கேப்டன் மற்றும் குழுவினர் மீண்டும் திருச்சியில் விமானத்தை தரையிறங்க திட்டமிட்டனர். இந்த விமானத்தில் மொத்தம் 141 பயணிகள் பயணித்தனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு அதிகமாக வானில் வட்டம் இட்ட நிலையில், பத்திரமாக தரையிறங்கியது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரை இறங்கிய செய்தியை கேட்டு மனம் நெகிழ்ந்தேன். தரையிறங்கும் கியரில் பிரச்சனை இருக்கிற செய்தியை கேட்டவுடன் நான் தொலைபேசியில் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவசரக் கூட்டத்தை ஒருங்கிணைத்தேன். அதோடு தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்புவது உட்பட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த அறிவுறுத்தினேன். மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதியளிக்க உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பாக தரையிறங்கிய கேப்டன் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் என்று அவர் கூறியுள்ளார்.