தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ள “கனவு ஆசிரியர் விருது” திட்டத்தின் மூலம் தனித்திறமை பெற்று விளங்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பான பல வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக வலுவான சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களில் தனித்தன்மை பெற்று உள்ள ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது தொழில் அறிவு சார் திறன் மேம்பாட்டிற்கு உதவுகிறது. இந்த “கனவு ஆசிரியர் விருது” திட்டத்தின் மூலம் ஆன்லைனில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெரும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 10,308 ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். தேர்வு 5 கட்டங்களாக நடத்தப்பட்டன. இந்தத் தேர்வின் குறைந்தபட்ச தேர்ச்சியான 75% மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டு,162 இடைநிலை ஆசிரியர்கள், 41 முதுநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள் என 380 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தேர்வில் 90% தேர்ச்சி பெற்ற 54 ஆசிரியர்கள் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி பிரான்ஸ் நாட்டுக் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சுற்றுலா அக்டோபர் 28ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டது.

இந்த சுற்றுலாவுக்கு ஆசிரியர்களுடன் இணைந்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் சென்றுள்ளார். இந்த சுற்றுலா குறித்து தனது இணையதள பக்கத்தில் அமைச்சர் கூறியதாவது, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்று, 1889-ல் நூறு ஆண்டுகள் ஆகியிருந்தன. அந்த நூற்றாண்டைக் கொண்டாட பிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டதுதான் ஈஃபிள் கோபுரம். உலகம் போற்றும் இந்த இரும்புக் கோபுரத்தை “கனவு ஆசிரியர்” பெருமக்களோடு இணைந்து பார்வையிட்டோம். இவ்வாறு தெரிவித்திருந்தார். அன்பில் மகேஷ் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.