இந்தியாவில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி மும்மொழி  பாடத்திட்ட கொள்கையை அனைத்து மாநில அரசுகளும்  அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மூன்று மொழிகள் கட்டாயமாக படிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியும் அதனை மறுத்து வரும் மாநிலங்கள் மீது பா.ஜ.க வழக்கறிஞர் ஜி.எஸ். மணி சுப்ரீம் கோர்ட்டில்  பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தேசிய கல்விக் கொள்கை மத்திய அரசால் பள்ளிக்கல்வி குழந்தைகள் இலவசமாக பயில வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து மாணவ, மாணவிகளின் கல்வித் தரமும் மேம்படும். இந்திய மாணவர்கள் அனைவரும் மூன்றாவது மொழி ஒன்றை கற்றுக்கொள்ள மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை மாநில அரசு அமல்படுத்த வேண்டியது அந்தந்த மாநில அரசின் கடமையாகும்.

சில அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநில அரசுகள் மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தினை எதிர்ப்பது பள்ளி குழந்தைகளின் அடிப்படை உரிமையான இலவசக் கல்வியை மறுக்கும் செயலாகும். இலவச கல்வி என்பது இந்திய அரசியலமைப்பு கொடுத்துள்ள அடிப்படை உரிமையாகும். தேசிய கல்வி கொள்கை மூலம் பள்ளி கல்வித் தரம் மேம்படும். அனைத்து இந்திய மொழிகளையும் ஏழை எளிய மாணவர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்”. என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.