மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில், 22 வயதான முதலாமாண்டு மாணவர் சிவான்ஷ் குப்தா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த, குர்கானில் வசிக்கும் புகழ்பெற்ற மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவரது பெற்றோரும், 2 சகோதரிகளும் மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். அதனால் சின்ன வயதில் இருந்து மருத்துவம் குறித்த இலக்கை வைத்திருந்த இவர், கல்லூரியில் அனைவரிடமும் நம்பிக்கைக்குரியவராகவும், அமைதியானவராகவும் விளங்கினார்.

இந்நிலையில் தற்கொலைக்கு முன், சிவான்ஷ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு “மன்னிக்கவும், நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். என்னை போல யாரும் செய்ய வேண்டாம்” என உணர்ச்சிபூர்வமான செய்தியை அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

இந்த செய்தியைப் பார்த்ததும் அவரது நண்பர்கள் அவசரமாக விடுதிக்கு ஓடினர். அவர் விடுதியின் மாடிமீது தற்கொலை செய்ய தயாராக இருப்பதைக் கண்டதும் உடனே காப்பாற்ற முயன்றனர், ஆனால் அதற்குள் அவர் கீழே குதித்துள்ளார் . அங்கு நின்ற மாணவர்கள் அவரை உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக சிவான்ஷ் மனச்சோர்வுடன் இருந்ததாகவும், பாடங்களின் அழுத்தம், தனிமை போன்ற காரணங்கள் இருக்கக்கூடும் எனவும் நிர்வாகம் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆனால், ராகிங் சம்பவம் என ஏதும் தெரியவில்லை என்றும், அந்த விடுதியில் முதலாமாண்டு மாணவர்களே அதிகமாக இருப்பதால், அந்த வாய்ப்பு இல்லை என்றும் டீன் டாக்டர் நவ்நீத் சக்சேனா கூறினார். மேலும், தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணைக்காக உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, அவரது பெற்றோர் குர்கானிலிருந்து ஜபல்பூருக்கு புறப்பட்டுள்ளனர். அவரது மொபைல் போன்னை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே முழு உண்மையும் வெளிவரும்  அதிலிருந்து மேலும் தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால், மீதமுள்ள மாணவர்களிடமும் மனநலம் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. “சிவான்ஷ் ஒரே மகனாக இருந்ததால், அவரது குடும்பம் இன்று முற்றிலும் உடைந்திருக்கிறது” என பலரும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.