
ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
குறிப்பாக இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாததால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடிகருமான யோகராஜ் சிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, நான் நம்புவது பஞ்சாப் அணியை தான். பஞ்சாப் அணிக்கு அற்புதமான கேப்டன் உள்ளார். அவர் மிகவும் அற்புதமான விளையாட்டு வீரர். இந்தப் போட்டியே, பஞ்சாப் அணியின் ஸ்ரேயாசுக்கும், ஆர்சிபி அணியின் விராட் கோலிக்கும் இடையே நடக்கும்.
இந்த இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி எந்த இடத்தில் இருந்தும் வெற்றியை பெற முடியும் எனில், பஞ்சாப் அணிக்கு ஸ்ரேயாஸ்சும் அதை செய்வார். ஆனால் இதில் மிக முக்கியமானது பஞ்சாப் அணி முதல் 10 ஓவர்கள் முடிவதற்குள் விராட் கோலியை அவுட் செய்ய வேண்டும்.
இல்லையெனில் பஞ்சாப்அணி சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். விராட் மட்டும் அவுட் ஆகவில்லை என்றால் 250க்கும் அதிகமான ரன்களை எளிதாக வென்று விடுவார். அதோடு ஆட்டம் முடிந்தது. இருந்தாலும் பஞ்சாப் அணிதான் வெற்றி பெறும் என எனது அறிவு கூறுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.