
டெல்லியின் சாராய் காலே கான் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையில் கிடந்துள்ளார். ரத்தம் தோய்த்த நிலையில் கிடந்த அவரை அந்த வழியாக சென்ற கப்பற்படை ராணுவ அதிகாரி ஒருவர் பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்தப் பெண் பட்டதாரி என்பதும், ஒடிசாவை சேர்ந்தவர் என்பதும், ஒரு வருடத்திற்கு முன் டெல்லிக்கு வந்து தனது தோழியின் வீட்டில் தங்கி இருந்தார் என்பதும் தெரியவந்தது.
அந்தப் பெண்ணுக்கும், அவரது தோழிக்கும் இடையே சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தோழியின் வீட்டில் இருந்து வெளியேறி, போக இடமின்றி சாலையில் இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட சிலர் அந்த பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து சாலையில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.