
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் சிறுமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், தோனிமலை, செந்துறை, பன்றிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் விடுதியை மூடிவிட்டதால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விடுதியை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு மாணவர்கள் அங்கிருந்து சென்றனர். பள்ளி மாணவர்கள் ஒன்றாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.