
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனுவை 5ஆவது முறையாக தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பெனிஸ் ஆகியோர் காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் தலைமை காவலர்கள் முருகன் என 9 பேரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை முதலாவது நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தான் உதவியாளர் ரகு கணேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுவில் இந்த வழக்கில் 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தான் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், தந்தை – மகன் இறப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தற்போது உடல் நல குறைவு காரணமாக மிகுந்த சிரமப்பட்டு வருவதாகவும், எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த விசாரணை என்பது நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் சாத்தான்குளம் வழக்கு என்பது இறுதி கட்ட விசாரணையில் இருக்கிறது. இந்த நேரத்தில் ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்கினால் அவரால் சாட்சியங்களை கலைக்கப்படும். மேலும் இந்த விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல ஜெயராஜனுடைய மனைவி தரப்பிலும் இதே கருத்தை வலியுறுத்தி அவருக்கு ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ரகு கணேசன் உடைய இரண்டாவது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். அவருடைய ஜாமீன் ஐந்தாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.