
தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு தினமும் 3000 திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனருகே போலீஸ் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த காவல் நிலையத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காவேரி தினந்தோறும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள உணவகத்தில் உணவருந்துவது வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என்று கூறி சென்று விடுவார் என தெரிய வருகிறது.
வழக்கத்தைப் போல நேற்று சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் பின்பு தருகிறேன் என்று கூறியுள்ளார். அதை ஒரு மாலை உணவு சாப்பிட வந்த காவேரி உணவு உண்டதும் கடை உரிமையாளர் முத்தமிழ் நேற்று சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காவேரி முத்தமிழை தகாத வார்த்தையில் பேசியும், பணத்தை தூக்கி வீசி விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிய வருகிறது. மேலும் தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற சி.சி.டி.வி. வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கடை உரிமையாளரிடம் விசாரித்த போது, சிறப்புப் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினமும் தங்களது ஓட்டலில் உணவு சாப்பிட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் உணவு சாப்பிட்டு விட்டு முழு பணத்தை தராமல் கையில் இருப்பதை மட்டும் கொடுத்துவிட்டு செல்வார்.
நேற்று முன்தினம் சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டதற்காக தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்து காலில் அணிந்திருந்த ஷீவை கழற்றி என்னை அடிக்க வந்தார் எனக் கூறியுள்ளார். இது குறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஷீவை கழற்றி ஓட்டல் உரிமையாளரை தாக்க முயன்ற சி சி டிவி காட்சி வெளியானதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் தர்மபுரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து எஸ் பி மகேஸ்வரன் அதிரடி நடவடிக்கையாக சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காவிரியை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.