சத்தீஸ்கரில் உள்ள சஜா பஹாத் கிராமத்தை சேர்ந்தவர் ஷியாம்லால் என்ற நபர். இவருக்கு 15 வயது இருக்கும் போது அவரது கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அப்போது கிராமவாசிகள் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரைக் கூட பெற முடியாமல் தவித்து வந்துள்ளனர்.

கிணறுகள், குளங்கள் போன்ற எந்த ஒரு நீர் வளங்களும் இல்லாததால் அந்த கிராமம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டது. அப்போது ஷியாம்லால் கிராம மக்களையும், விலங்குகளையும் காப்பதற்காக காட்டில் ஒரு இடத்தை அடையாளம் கண்டு குளம் தோண்ட ஆரம்பித்துள்ளார்.

இதனை இவர் தனது 15 வயதிலிருந்து தோண்ட தொடங்கியுள்ளார். அதனால் கிராமவாசிகள் அனைவரும் அவரை அப்போது கேலி செய்தனர். அவற்றைப் பொருட்படுத்தாமல் அயராது உழைத்து பல ஆண்டுகளாக குளத்தை தோண்டி வந்துள்ளார்.

மேலும் ஷாம்லால் தான் எடுத்த முடிவில் உறுதியாக செயல்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவில் 15 அடி ஆழமுள்ள ஒரு குளத்தை தோண்டி முடித்துள்ளார்.

தற்போது அந்தக் குளம் அப்பகுதியில் உள்ள கிராமவாசிகளால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அப்பகுதியில் மிக முக்கியமான தண்ணீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இது குறித்து 42 வயதாகும் ஷாம்லால் கூறியதாவது, “எனக்கு இந்தப் பணியில் யாரும் உதவவில்லை நிர்வாகமோ அல்லது கிராம மக்களுக்கு கூட என்னுடன் உதவிக்கு வரவில்லை.

எனது கிராமத்தின் மக்கள் மற்றும் கால்நடைகளின் நலனுக்காக மட்டுமே இதை செய்தேன் “என பெருமையுடன் கூறினார். தற்போது கிராம மக்கள் அனைவரும் அவரை ஒரு முன்மாதிரியாகவும், மீட்பவராகவும் போற்றி வருகிறார்கள்.