ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க கலைக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். அந்த வகையில் அம்மாவட்ட பாஜகவில் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுவதாகவும், கட்சி நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட இருப்பதால் மாநில தலைமை இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய மாவட்ட தலைவராக தரணி முருகேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பாஜகவினருக்கு தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், கோடைக்காலம் துவங்கி உள்ள இன்றைய சூழலில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கும் பணியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். அந்த தண்ணீர், மோர் பந்தல்களை தினசரி பராமரிக்க வேண்டும். மக்கள் தேடி வந்து பயன்படுத்தும் வகையில் அங்கு நல்ல சூழலை உருவாக்கி தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.