
சென்னை மாநகராட்சி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தை பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் குடிநீர் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏடிஎம்களிலும் 150 மில்லி லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் என 2 அளவுகளில் குடிநீர் பெற்றுக்கொள்ள முடியும்.
பொதுமக்கள் தாங்கள் கொண்டுவரும் தண்ணீர் பாட்டில்களில் சுத்தமான நீரை நிரப்பி கொள்ளலாம். இந்த அதிநவீன நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் முன் வடிகட்டுதல், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் மற்றும் புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றைக் கொண்டு தூய்மையான நீரை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 24 மணி நேரமும் தடையின்றி இந்த குடிநீர் ஏடிஎம் செயல்படும். நீர் இருப்பு இல்லாத நிலையிலும் கடவுச்சொல் மூலம் நீரை ரீசார்ஜ் செய்யும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடைசி 50 முறை ரீசார்ஜ் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்களையும் பயனர்கள் பார்க்க முடியும். இது பேட்டரி மூலம் இயங்குவது கூடுதல் சிறப்பாகும். கட்டண வசூலில் துல்லிய தன்மையை உறுதி செய்வதற்காக ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் பயன்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீர் ரீசார்ஜ் மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் பயனர்கள் உடனுக்குடன் தெரிவித்து தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள 50 ஏடிஎம் களை மெரினா கடற்கரையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.