திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய பயிற்சி ஒன்று வழங்கப்பட உள்ளது. அதன்படி (ஏ.எம்.சி.ஏ.டி.) என்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம்.

இந்த பயிற்சியினை பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சி 3 மாதம் கால அளவில் அளிக்கப்பட்டு, அனைத்து செலவினமும் தாட்கோவால் வழங்கப்படும்.

இதனையடுத்து மாணவர்கள் இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்தால், ஏ.எம்.சி.ஏ.டி. தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, அதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பினை பெற முடியும்.  இந்த பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.